நாகர்கோவில் ஏப் 24
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து
பாஜக சிறுபான்மை பிரிவு மாநில பொதுச் செயலாளர் சதீஸ் ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது, தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 26 பேர் உயிர் இழந்திருக்கும் சம்பவம் துரதிஷ்டவசமானது. துளியும், மனிதத் தன்மையற்ற மத பயங்கரவாதிகள், புனிதமான இந்திய ராணுவ உடையில் வந்து இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடுவோர் ஒட்டுமொத்த மனித குலத்திற்கே விரோதமானவர்கள்.
அதிலும் மதம் என்னும் போதை மித மிஞ்சி தலைக்கேறி அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகளை அவர்களின் பெயரைக் கேட்டும், அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தை சொல்லக் கேட்டும், ஆண்களை ஆடையைக் கழற்றச் சொல்லி அதை உறுதி செய்து கொண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது வேதனையின் உச்சம். மதத்தின் பெயரால் மிகப்பெரிய பயங்கரவாதச் சம்பவத்தை பயங்கரவாதிகள் துளியும் மனிதத் தன்மை இன்றி அரங்கேற்றியுள்ளனர்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலக்கட்டத்தில், கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொந்ததரவு மிக அதிகமாக இருந்தது. காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகையான ஆர்ட்டிக்கிள் 370யை பயங்கரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதைப் பார்த்த மோடிஜி அரசு, அதை நீக்கி காஷ்மீரில் அமைதி திரும்ப ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்தார்., இதனால் ஜம்மு காஷ்மீர் மக்கள் மனநிம்மதியுடன் வாழ்ந்துவந்தனர். அங்கு அமைதி திரும்பியதுடன், அந்த உள்ளூர் மக்களின் தொழில்வாய்ப்பிற்காக சுற்றுலாத்துறை சார்ந்தும் காஷ்மீர் வளர்ச்சி பெற்று வந்தது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இந்த கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் உயிர் இழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், மோடிஜி அரசு, இந்தக் குற்றச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுப்பார்கள், சட்டத்தின்பிடியில் இருந்து யாரும் தப்பிக்கவே முடியாது என்பதையும் உறுதியாகத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். இந்தச் சம்பவத்திற்குக் காரணமான மத ரீதியிலான அடிப்படை பயங்கரவாதிகள் விரைவிலேயே கைது செய்யப்படுவார்கள். நரேந்திரமோடிஜி அரசு அதில் மிகுந்த உறுதியோடு செயல்பட்டு வருகிறது.”
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தியடையவும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.