தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்திற்குட்பட்ட இராமநாதபுரம் கிராமம் காமராஜர் மண்டபத்தில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீ குமார் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தலைமையில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் தெரிவித்தாவது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து தரப்பு மக்களுக்கும் தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களும் சென்றடைந்து பயனடைய வேண்டும் என அறிவுறுத்தியதன் அடிப்படையில் கிராமம் தோறும் மனுநீதி நாள் முகாம் உள்ளிட்ட பல்வேறு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அம்முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி வருகிறார்கள். அதனடிப்படையில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் பல்வேறு கோரிக்கை மனுக்கள் ஏற்பு செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. மேலும் அரசுத்துறை அலுவலர்கள் அனைவரும் தங்கள் துறை சார்ந்த திட்டங்களை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் எடுத்துரைத்தார்கள். எனவே பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள அனைத்து திட்டங்களையும் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்தார்.
இம்முகாமில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் மூலம் 02 பயனாளிகளுக்கு மாதம் ரூ.1200/- (வாழ்நாள்முழுவதும்) உதவித் தொகைக்கான ஆணையினையும், வேளாண்மைத்துறை மூலம் 03 பயனாளிகளுக்கு தலா ரூ.4000/- வீதம் ரூ.12,000/- மதிப்பிலான மின்கல தெளிப்பான்களையும், 02 பயனாளிகளுக்கு தலா ரூ.4000/- வீதம் ரூ.8000/- மதிப்பிலான சூரிய விளக்குகளையும், தோட்டக்கலைத் துறையின் மூலம் 01 பயனாளிக்கு மின்கல பொருத்திய ஸ்பிரேயரையும், 02 பயனாளிகளுக்கு வெண்டை விதைகளையும், 20 பயனாளிகளுக்கு முழுப்புலம் பட்டாமாறுதலுக்கான ஆணையினையும், 11 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதலுக்கான ஆணையினையும், 20 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும், 02 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டைகளையும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் 01 பயனாளிக்கு ரூ.13,500/- மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிளினையும், 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.13,500/- மதிப்பிலான நான்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் , தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் வழங்கினார்கள்.
முன்னதாக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி, தோட்டக்கலை துறை, வேளாண்மை துறை, சமூகநலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் பொதுமக்கள் அறிந்திடும் வகையில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு பயனடைந்தார்கள்.
இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை போன்ற கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் (சங்கரன்கோவில்) கவிதா, வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பொன்முத்தையா பாண்டியன், இராமநாதபுரம் ஊராட்சிமன்றத்தலைவர் மகேந்திரன், வருவாய் வட்டாட்சியர் (சிவகிரி) இரவிக்குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.



