கொல்லங்கோடு, ஏப்- 6
கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் அம்மு குட்டி (57). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் மற்றும் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. தற்போது மகனுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 5:45 மணியளவில் வீட்டு அருகில் உள்ள தோட்டத்திற்கு தேங்காய் பொறுக்குவதற்கு சென்று விட்டு தனக்கு கிடைத்த ஒரு தேங்காயுடன் இடம் வீட்டிற்கு நடந்து வந்துள்ளார்.
அவர் நடந்து வந்த பாதையில் மேல் பகுதி வழியாக வீடுகளுக்கு செல்லும் மின் கம்பி ஒன்று நேற்று இரவு இடியுடன் கூடிய மழை காரணமாக அறுந்து கீழே தொங்கிக் கொண்டிருந்தது. இதை கவனிக்காத அம்முக்குட்டி அந்த வழியாக சென்றபோது அறுந்து தொங்கிய மின்கம்பி திடீரென அம்மு குட்டி மீது பட்டது.
இதில் மின்சாரம் பாய்ந்ததால் அம்மு குட்டி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் சம்பவ இடம் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.