நித்திரவிளை , பிப்- 13
குமரியில் ஆட்டோக்கள் மற்றும் வேன்களில் பள்ளி மாணவ மாணவியர்களை ஏற்றி செல்வது வழக்கம். இதற்கு பல்வேறு விதிமுறைகளை போலீஸ் வைத்துள்ளது. போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி இவற்றை கண்காணித்து வருகின்றனர்.
இருப்பினும் விதி மீறல்கள் பல பகுதிகளில் நடந்து விபத்துக்கள் உயிர் பலிகள் ஏற்பட்டது உண்டு. அரசின் உத்தரவுகளை ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் மதிப்பது கிடையாது. ஒரு பயணிகள் ஆட்டோவில் சுமார் 15 முதல் 20 குழந்தைகள் வரை ஏற்றிக் கொண்டு செல்லும் அவலம் நடக்கிறது. நேரம் கருதி பெற்றோர்களும் விபரீதம் தெரியாமல் பள்ளிக்கு பிள்ளைகளை இதுபோல் ஆட்டோவில் அனுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் குறிப்பாக கொல்லங்கோடு, நித்திரவிளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீனவர் கிராமங்களில் பயணிகள் ஆட்டோவில் அதிகமான மாணவ மாணவிகளை ஏற்று செல்வது வாடிக்கையாக உள்ளது. இது குறித்து அதிகாரிகள் பராமுகம் காண்பிப்பதாக புகார் எழுந்துள்ளது. எனவே இது போன்ற ஆட்டோக்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.