ஆரல்வாய்மொழி ஜன 22
சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது –
ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவிதொகை ரூ 4 ஆயிரம் முதல் ரூ 10 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் ரூ 1000 மட்டுமே வழங்கப்படும் நிலையில் விலைவாசி உள்ளிட்ட காரணங்களால் இதனை அதிகரித்து வழங்கிட தமிழ் நாட்டின் மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இதுபோல் உதவித்தொகைக்கென விண்ணப்பித்து பல காலமான போதும் விண்ணப்பங்கள் தேங்கி கிடக்கும் நிலையில் இவர்கள் உள்ளத்தளவிலும் மிகவும் சோர்ந்து போய் உள்ளனர். கிராமப்புறங்களில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இவர்களுக்கு வேலை வழங்க மறுப்பதாகவும் சட்டப்படியான வேலை நேரத்தை விட கூடுதலாக வேலை செய்ய நிர்ப்பந்தம் செய்யப்படுவதாகவும் இவர்கள் புகார்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் மாவட்ட அளவில் வீடு இல்லாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாத நிலையில் தங்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தும் நிலைக்கு வந்தபின்னும் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது வேதனை அளிப்பதாகவே உள்ளது.
அரசு இவர்களது கோரிக்கைகளுக்கு செவி கொடுக்காத நிலையில் நேற்று (21ந்தேதி) ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தி உள்ளனர். இவர்களது போராட்டத்திற்கு சமூக பொதுநல இயக்கம் ஆதரவு தெரிவிக்கின்றது. மேலால் தொடரும் இவர்களது முயற்சிகளுக்கும் இயக்கம் ஒத்துழைப்பு அளிக்கும்.
தமிழக அரசு இவர்களது கோரிக்கைகளை காது கொடுத்து கேட்பதோடு, ஆதரவு கரம் நீட்டி நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்துகின்றோம். இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.