தருமபுரி மாவட்டம், பாலஜங்கமனஅள்ளி சிறுதானியங்கள் பதப்படுத்தும் மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் 2024 -2025 திட்டத்தின் கீழ் 75 சதவீத மானியத்தில் சிறுதானியங்கள் பதப்படுத்தும் மையங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பாலஜங்கமன அள்ளியில் உள்ள சிறு தானியங்கள் பதப்படுத்தும் மையத்தின் மூலம் பல்வேறு வகையான சிறுதானியங்கள் தூய்மைப்படுத்தி விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். இந்த சிறுதானியங்கள் பொதுமக்களுக்கு இடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதனால் விற்பனை அதிகரித்து பயனாளிகள் நல்ல வருமானம் பார்த்து வருகின்றனர். சிறுதானியங்கள் பதப்படுத்தும் மையத்தின் செயல்பாடுகள், அவற்றின் திறன், எந்தெந்த சிறுதானியங்கள் பதப்படுத்த முடியும்? என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார். இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மற்றும் மானியங்கள் விவரம் குறித்தும் அவர் கேட்டறிந்தார். மேலும் இந்த மையத்தின் மூலம் எத்தனை பேர் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள்? மறைமுகமாக எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்ற விவரங்களையும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது வேளாண் வணிக துறை துணை இயக்குனர் இளங்கோவன், உதவி வேளாண்மை அலுவலர் கணபதி மற்றும் துறை அலுவலர்கள் இருந்தனர்.



