தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தருமபுரி- காவேரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் முழு கடையடைப்பு போராட்டம் வரும் 4-10-2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி. கே. மணி பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி இந்த போராட்டம் நடைபெறுகிறது.மேற்கில் காவிரியும்,வடக்கில் தென்பெண்ணை ஆறும் ஓடும் போதிலும் குடிப்பதற்கும், பாசனத்திற்கும் தண்ணீர் இல்லாமல் தருமபுரி மாவட்டம் பாலைவனமாக காட்சியளிக்கிறது. தருமபுரி மாவட்டத்தை சோலைவனமாக மாற்ற தருமபுரி- காவேரி உபரி நீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை ராட்சத குழாய்கள் மூலம் ஏரி, குளம், நீர்நிலைகளில் உபரி நீரை நிரப்பினால் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 10 அணைகள்,83 ஏரிகள், 763 சிறிய ஏரிகள் உள்பட மொத்தம் 1230 நீர்நிலைகளில் உபரி நீரை நிரப்புவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம் .இதனால் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் கூடுதலாக பாசம் வசதி பெறும். மாவட்டத்திலுள்ள 80 விழுக்காடு மக்கள் பயனடைவார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்த குறி தமிழக முதலமைச்சரிடம் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தோம் .இதுவரை இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவில்லை.எனவே கடை அடைப்பு போராட்டத்திற்கு வணிகர்கள், பொதுமக்கள் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.இதில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், பாடி செல்வராஜ், டாக்டர். செந்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



