கீழக்கரை ஜூலை 25-
மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம்
தமிழக முதல்வர்,தமிழக நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்,துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது,
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி 21 வார்டுகளை உள்ளடக்கி சுமார் 65 ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள் வசிக்கும் தாலுகா அந்தஸ்தில் இருக்கும் நகராட்சி ஆகும்.
கீழக்கரை நகராட்சியில் தற்போது நிரந்தர ஆணையர் பணியில் இல்லாத காரணத்தால் இராமநாதபுரத்தில் பணியாற்றும் ஆணையர் அவர்கள் கூடுதல் பொறுப்பாக கீழக்கரை நகராட்சி பணிகளை கவனித்து வருகின்றார்.இதனால் கீழக்கரை நகராட்சி பணிகளை கவனிப்பதில் தொய்வு நிலை ஏற்படுகிறது.
கீழக்கரை நகராட்சியில் ஊரின் விரிவாக்கம் மற்றும் மக்கள் தொகையை அடிப்படையில் 32 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும்.ஆனால் தற்போது கீழக்கரை நகராட்சியில் 17 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் மட்டுமே பணி செய்து வருகின்றார்கள்.
கீழக்கரை நகராட்சியின் விரிவாக்கம் கருதி நிரந்தர ஆணையர் மற்றும் கூடுதல் நிரந்தர துப்புரவு பணியாளர்களை பணியில் அமர்த்த கீழக்கரை பொதுமக்கள் சார்பாகவும்,எங்கள் மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாகவும் கேட்டு கொள்கின்றோம். இவ்வாறு தனது மனுவில் கூறியுள்ளார்.