கீழக்கரை ஜுலை 05-
கீழக்கரை நகராட்சி பகுதியில் 21 வார்டுகளும் நூற்றுக்கும் மேற்பட்ட தெருகளும் உள்ளன. கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்குதல், தெருவிளக்கு அமைத்தல், சாலை சீரமைத்தல், கழிவுநீர் கால்வாய் சீரமைத்தல், குப்பைகளை அகற்றுவது, சுகாதாரம் பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகள் நிறைவேற்றுவது அன்றாட தேவைகளில் ஒன்றாக உள்ளது.
மேலும் கீழக்கரை நகராட்சியில் குப்பை அள்ளுதல், கழிவுநீர் கால்வாய் மூடி சரி செய்தல், தெருவிளக்கு சீரமைத்தல்,சாலை சீரமைத்தல் போன்ற பணிகளுக்கு நியமித்த ஒப்பந்த காரர்களுக்கு சரியான முறையில் பணம் பட்டுவாடா செய்யாததால் பல்வேறு பணிகள் முடங்கி கிடக்கின்றன. மேலும் கீழக்கரை நகராட்சி பகுதியில் குப்பைகள் ஆங்காங்கே குவிக்கப்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாத சூழல் நிலவுகிறது
இந்நிலையில் கீழக்கரை நகராட்சியில் பணிபுரிந்து வந்த கமிஷனர் உடல்நிலை குறைவு ஏற்பட்டு விடுமுறையில் சென்றுள்ளார். விடுமுறைக்கு சென்று நீண்ட நாட்கள் ஆகியும் இதுவரையிலும் திரும்பவில்லை. நிரந்தர கமிஷனர் இல்லாததால் பணிகள் தாமதமாகதாக கூறப்படுகிறது.மேலும் தற்காலிகமாக ராமநாதபுரம் நகராட்சியில் பணிபுரியும் கமிஷனர் வாரம் இருமுறை மட்டுமே கீழக்கரைக்கு நகராட்சிக்கு வருகை புரிந்து முக்கிய சான்றிதழ்கள் மட்டுமே சரி செய்துவிட்டு செல்கின்றார். இதனால் பெரும்பாலான பணிகள் தொய்வு ஏற்பட்டு உள்ளது.
பெரு நகராட்சியான ராமநாதபுரம் மற்றும் கீழக்கரை நகராட்சியும் ஒரே கமிஷனரால் நிர்வாகம் செய்வது இயலாத ஒன்று.இதனால் பணி சுமை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே கீழக்கரையில் நிரந்தர கமிஷனரை அமைக்கக்கோரி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.