நாகர்கோவில், ஆக. 3 –
தமிழ்நாட்டில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து 210 செவிலியர் பணியிடங்களை செவிலியர் தட்டுப்பாடு உள்ள அரசு மருத்துவமனைக்கு மறுப்பணியமர்வு செய்யப்படுகிறது. இந்த பணியிடங்கள் அனைத்தும் புதிதாக தோற்றுவிக்கப்பட வேண்டிய பணியிடங்கள் ஆகும்.
ஆனால் புதிய பணியிடங்கள் எதுவும் தோற்றுவிக்காமல் இருக்கும் செவிலியர்களை வைத்து அரசு மருத்துவமனைகளை நடத்த நினைக்கும் தமிழக அரசை கண்டித்தும், உடனடியாக புதிய செவிலியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடக்கின்றன.
இதன் ஒரு கட்டமாக இன்று கோரிக்கை அட்டை அணிந்து பணியாளர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற அரசு செவிலியர்கள் கோரிக்கை அட்டையில் அணிந்து பணிக்கு வந்தனர்.
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 சுற்றுகளில் பணியாற்றிய அனைத்து செவிலியர்களும் கோரிக்கை அட்டை அணிந்திருந்தனர். தக்கலை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை உள்பட அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த போராட்டம் நடைபெற்றது.



