நாகர்கோவில், ஜூலை 27 –
கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவில் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புர வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்திய தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமை வகித்தார். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் செ.ராஜேஷ் குமார் உடனடி நியமன ஆணை வழங்கி கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருவதுடன், தனியார் துறையிலும் தகுதியான இளைஞர்களுக்குப் வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் இதுபோன்ற மாவட்ட அளவிலான முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. இம்முகாமில் 2112 வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களில் 482 வேலைநாடுநர்கள் பணிநியமனம் பெற்றனர். 316 வேலைநாடுநர்கள் முதற்கட்ட நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டனர். பணியாணை பெற்ற மாணவர்களை வாழ்த்துகிறேன் என கூறினார்.
அதனைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், உடல் பருமன் மற்றும் அயோடின் குறைபாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நடைபெற்ற முகாமில் திருநெல்வேலி மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) டாக்டர் கா.சண்முகசுந்தர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆ.பொ.ஆறுமுக வெங்கடேஷ், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் சா.பத்ஹீ முகமது நசீர், பயோனியர் குமாரசுவாமி கல்லூரியின் தலைவர் மற்றும் செயலாளர் பி.குமாரசுவாமி, கல்லூரி பேராசிரியர்கள், நிறுவன பிரதிநிதிகள், பெற்றோர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



