சென்னை, ஜூலை 23 –
உயர் சிகிச்சைக்கு இந்நாட்டில் புகழ்பெற்ற காவேரி மருத்துவமனை குழுமம், ‘காவேரி 3X சென்னை’ என்ற பெயரில் ஒருங்கிணைந்த ரோபோட்டிக் அறுவைசிகிச்சை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் மேம்பட்ட ரோபோட்டிக் தொழில்நுட்பம், விரிவான அறுவைசிகிச்சை நிபுணத்துவம் மற்றும் அதிக திறன் கொண்ட பல்துறை மருத்துவக் குழுக்களை சென்னையில் உள்ள அதன் மூன்று மருத்துவமனைகளிலும் சீரான உயர்தர சிகிச்சை வழிகாட்டுதல்களின் கீழ் ஒன்றிணைக்கிறது.
இந்த ரோபோட்டிக் அறுவைசிகிச்சை திட்டங்கள், உலகின் மிக மேம்பட்ட தொழில்நுட்பங்களில் ஒன்றான 4-ஆம் தலைமுறை டா வின்சி ரோபோட்டிக் அறுவைசிகிச்சை சாதனத்தின் அடிப்படையில் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் இரையக குடலியல், புற்றுநோயியல், சிறுநீர்பாதையியல், மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் மற்றும் சிறுநீரக மருத்துவவியல் உள்ளிட்ட பல மருத்துவத் துறைகளில் ரோபோட்டிக் சாதன உதவியுடன் சிகிச்சையளிக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனரும், செயல் இயக்குநருமான டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் அவர்கள் பேசுகையில், ‘காவேரி 3X சென்னை’ திட்டத்தின் மூலம், மேம்பட்ட தொழில்நுட்பம், பல்துறை நிபுணத்துவம் மற்றும் சீரான உயர்தர சிகிச்சை ஆகியவற்றை சென்னையில் உள்ள எங்களது மூன்று மருத்துவமனைகளிலும் ஒன்றிணைத்து, ஒரு முழுமையான ரோபோட்டிக் அறுவைசிகிச்சை சூழல் அமைப்பை நாங்கள் உருவாக்கி செயல்படுத்துகிறோம்.
காவேரி மருத்துவமனைக்கே உரித்தான உயர்தரம் மற்றும் நிலைத்தன்மையுடன், நோயாளிகள் இனி தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே அமைந்திருக்கும் எங்களது மூன்று மருத்துவமனைகளில் ஏதாவதொன்றில் சிறப்பான பலன்களை வழங்கும் விரிவான ரோபோட்டிக் சிகிச்சையைப் பெறலாம்.



