நாகர்கோவில், ஜூலை 16 –
குமரி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்திற்கு ரேஷன் அரிசி, மானிய விலை மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல பொருட்கள் கடத்தப்பட்டு வருவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பறக்கும்படை அதிகாரிகள் தற்போது 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10.45 மணியளவில் மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் கெ.எம்.பாரதி தலைமையில், ஓட்டுனர் ஜாண் பிரைட் பறக்கும் படை குழுவினர்கள் மற்றும் நித்திரவிளை காவல் உதவியாளர் ராஜா ராபர்ட் உதவியுடன் கிள்ளியூர் வட்டார பகுதியில் கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் இருந்தனர். அப்போது விரிவிளை என்ற இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த வாகனத்தை சோதனை செய்ததில் பழைய மீன் வலையின் அடியில் 30 பிளாஸ்டிக் கேன்களில் சுமார் 1050 லிட்டர் மீனவர்களுக்கு மானியவிலையில் அரசால் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெய் கேரளா மாநிலத்திர்க்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடத்தலில் ஈடுபட்ட குறும்பனையை சேர்ந்த சுதன் ராஜ் (38) மற்றும் குறும்பனையை சேர்ந்த ஷிபு (41) ஆகிய 2 நபர்களையும் மாவட்ட குடிமை பொருள் குற்றவியல் காவல் ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. மண்ணெண்ணெய் தூத்தூர் சின்னதுறை அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.



