நாகர்கோவில், ஜூலை 6 –
மார்த்தாண்டத்தை அடுத்த புறாக்கோடு என்ற பகுதியை சேர்ந்தவர் ராஜன் என்பவரது மனைவி புஷ்பம் (38). இவர் கடந்த ஜனவரி மாதம் வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். பின்னர் வந்து பார்க்கும் பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டை உடைத்து பீரோவில் இருந்த 14 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. உடனே இது குறித்து புஷ்பம் பளுகல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த கொள்ளை தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுப்படி, மார்த்தாண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் பளுகல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் குற்றவாளியை கண்டறிந்து கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் வீடு புகுந்து திருடிய சம்பந்தப்பட்ட குற்றவாளி கேரளா மாநிலம் காட்டாக்கடை, புலநாடு பகுதியை சேர்ந்த உன்னி கிருஷ்ணன் (53) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து கேரளா போலீசார் உதவியுடன் குற்றவாளியை கைது செய்து, போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் உன்னி கிருஷ்ணன் கொள்ளை அடித்த நகை மற்றும் பணத்தின் மூலமாக கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியில் அவரது மனைவி பெயரில் சுமார் 8.40 லட்சம் மதிப்பிலான 10 சென்ட் நிலம் வாங்கியது தெரியவந்தது.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட பளுகல் காவல் நிலைய போலீசார் தகுந்த ஆதாரங்களை குழித்துறை நீதித்துறை நடுவரிடம் ஒப்படைத்தனர். அதன் அடிப்படையில் குற்றவாளி திருடிய பணத்தில் தன்னுடைய மனைவியின் பெயரில் வாங்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்த குழித்துறை நீதிமன்ற உத்தரவின் பேரில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


