நாகர்கோவில், ஜூன் 25 –
நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் கன்னியாகுமரி நகராட்சி பகுதிகளில் இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரிகிறதா என்பதை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில்: நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பேருந்து நிலைய முகப்பு, வடிவீஸ்வரம், தேர்மூடு பகுதிகளில் தெருவிளக்கு அனைத்தும் பழுதின்றி எரிகிறதா என்று நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பழுதடைந்த தெருவிளக்குகளை உடனடியாக மாற்றிட மாநகராட்சி பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி நகராட்சிக்குட்பட்ட நகரின் முக்கிய சந்திப்புகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தெருக்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கடற்கரைச் சாலைப் பகுதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சி என அனைத்து பகுதிகளிலும் பழுது அடைந்துள்ள மற்றும் எரியாத தெருவிளக்குகளை உடனடியாகக் கண்டறிந்து, அவற்றைச் சீரமைக்க வேண்டும். இனிவரும் காலங்களில் தெருவிளக்குகள் பராமரிப்பில் எவ்வித தொய்வும் இருக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இரவு நேரங்களில் பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி நடமாடும் வகையில் அனைத்துப் பகுதிகளிலும் மின்விளக்குகள் தடையின்றி எரிவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.
நடைபெற்ற ஆய்வில் நாகர்கோவில் மாநகராட்சி பொறியாளர் ரகுராம், கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் பட்டுசாமி, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



