நாகர்கோவில், ஜூன் 23 –
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் சார்பில் ‘மாற்றம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், முன்னிலை வகித்தார்.
கலெக்டர் குத்துவிளக்கேற்றி, போதைப்பொருள் எதிர்ப்பு லோகோவினை அறிமுகப்படுத்தி, பள்ளி மாணவ மாணவியர்களிடையே பேசியதாவது: குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில், இளைஞர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாற்றம் என்னும் உன்னதமான புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழா மற்றும் விழிப்புணர்வு குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது.
நம்முடைய மாவட்டமானது கல்வியில் சிறந்து விளங்கி, பல அறிவார்ந்த ஆளுமைகளை உருவாக்கிய பெருமைக்குரிய மாவட்டமாகும். இத்தகைய சிறப்புமிக்க மாவட்டத்தில், போதைப்பொருள் என்ற சிறிய கரும்புள்ளியால் இளைஞர்களின் முன்னேற்றமும், மாற்றமும் தடைபட்டுவிடக் கூடாது என்ற உயரிய நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனையின் படி, இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படவுள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஆர்.ஸ்டாலின் பேசுகையில்: போதைப் பழக்கம் முதலில் ஒழுக்கமின்மையை ஏற்படுத்தும். பின்னர் உங்கள் கல்வி திறனை பாதித்து இறுதியில் குடும்பத்தின் நம்பிக்கையை இழக்க வைத்து விடும். மாணவர்கள் தான் அந்த குடும்பத்தின் கலங்கரை விளக்கம். போதைக்கு அடிமையாகி விடுவதால் பெற்றோர்களின் கனவை சிதைத்து விடுகிறார்கள். மாணவர்களாகிய உங்களுடைய மனம் தடுமாறி விடாமல் நல்வழியில் சிந்தனையுடன் செல்ல வேண்டும். போதை பழக்கத்திற்கு எந்த விதத்திலும் அடிமையாகி விடக் கூடாது. அவ்வாறு அடிமையாகி விட்டவர்களை மீட்க காவல்துறையால் மட்டும் முடியாது. அனைவரும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த மாற்றம் என்ற இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசினார்.
தொடர்ந்து மாவட்ட காவல்துறையினரால் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பார்வையிட்டார்கள். இந்த விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆரோக்கிய பிரின்ஸ் ராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.நமச்சிவாயம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சகிலாபானு, துறை அலுவலர்கள், காவல்துறையினர், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



