நாகர்கோவில், ஜூன் 20 –
கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற கருப்பொருளினை மையமாக கொண்டு தோவாளை ஊராட்சி ஒன்றியம் மாதவலாயம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று 20ம் தேதி பிங்க் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இச்சிறப்பு கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் கலந்து கொண்டு தாய்மார்கள் மற்றும் பெண் குழந்தைகளிடையெ பேசியதாவது: பெண்களுக்காக மட்டுமே, சிறப்பு கிராம சபை நடத்துவது தமிழ்நாட்டில் தான் என்பது மிகவும் பெருமைக்குரியது. இந்த கிராம சபை ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடைபெறும். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மட்டுமல்லாமல், கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து உரிமைகளிலும் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பெண்களின் பாதுகாப்பிற்காகத் சமீபத்தில் தமிழ்நாடு அரசு ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ போன்ற சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களின் எதிர்கால உயர்கல்விக்காக செல்வமகள் சேமிப்பு நிதி திட்டத்தின் கீழ் நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது. அரசியல் சாசனம் பெண்களுக்கு வழங்கியுள்ள சம உரிமை மற்றும் சம வாய்ப்புகளைப் பயன்படுத்தி, பெண் குழந்தைகள் அனைவரும் சமூகத்தின் உன்னத நிலையை அடைய வேண்டும்.
தூய்மைக் காவலர்களிடம் குப்பைகளை வழங்காமல் சாலையோரங்களில் வீசுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், உங்களைச் சுற்றி கொசுக்கள் உற்பத்தி ஆனால், அது உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் தான் பாதிக்கும். எனவே, சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்க பெண்கள் முன்வர வேண்டும் என கூறினார். தொடர்ந்து பெண்குழந்தைகளை காப்போம் பெண்குழந்தைகளை கற்பிப்போம் உறுதிமொழியினை ஏற்று, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்க மரக்கன்றுகள் வழங்கினார்கள்.
நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் உதவி ஆட்சியர் பயிற்சி மோனிகா, மாவட்ட சமூகநல அலுவலர் விஜயமீனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சகிலாபானு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார சுகாதார அலுவலர்கள், குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.



