தருமபுரி, ஜூன் 19 –
தருமபுரி அருகே நத்தஅள்ளி கிராமத்தில் தனியார் ஒருவருக்கு கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்குவாரி அமைய உள்ள பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். இது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்தும், அதனை பரிசீலிக்காமல் கல்குவாரி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் பாண்டியன் தலைமையில் விவசாய அணி மாநில நிர்வாகி கிள்ளிவளவன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கரிகாலன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் கல்குவாரி அமைய உள்ள அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நல்லம்பள்ளி தாலுக்கா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த கோரிக்கை மனுவில் பகுதியில் நத்தஅள்ளி கிராமத்தில் கல்குவாரி அமையும் பட்சத்தில் வெடி வைப்பதால் தூசி, சத்தம் அதிர்வுகள் ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கும். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் எனவே அந்த கல்குவாரி அனுமதியே உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மக்களின் எதிர்ப்பு மனுக்களை மீளாய்வு செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் நிலத்தடி நீர் பாதிப்பு குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்ய வேண்டும். இந்த அனுமதி வழங்கியதில் முறைகேடு இருந்தால் விசாரணை நடத்த வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



