நாகர்கோவில், ஜூன் 6 –
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், மாவட்ட காவல்துறையினரின் உடற்திறன், தொழில்திறன் மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று மாவட்டத்தின் அனைத்து காவல் உட்கோட்ட தலைமையிடங்களிலும் வாராந்திர கவாத்து மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இன்று நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல்துறையினருக்கு கவாத்து பயிற்சி, யோகா பயிற்சி, ஆயுதங்களை பாதுகாப்பாகவும் திறமையாகவும் கையாளும் முறைகள் தொடர்பான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாவட்ட எஸ்பி ஸ்டாலின் கலந்து கொண்டு காவல்துறையினரிடம் கூறியதாவது: குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே அவற்றை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பொதுமக்களிடம் மரியாதையுடனும், மனிதநேயத்துடனும் அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும். காவல்துறையின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையும் நன்மதிப்பும் அதிகரிக்கும் வகையில் செயல்பட வேண்டும்.
சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் குற்றத் தடுப்பு பணிகளில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும். காவல்துறையினரின் உடற்திறன் மற்றும் மனவலிமையை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது போன்ற பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை போலீசாருக்கு வழங்கினார்.
இந்த வாராந்திர கவாத்து மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகள் நாகர்கோவில், ஆயுதப்படை வளாகம், குளச்சல், தக்கலை, மார்த்தாண்டம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய காவல் உட்கோட்ட தலைமையிடங்களில், சம்பந்தப்பட்ட உட்கோட்ட காவல் அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றன.



