நாகர்கோவில், ஜூன்.5-
கன்னியாகுமரி அருகே உள்ள கடற்பகுதியில் கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி கொல்லத்தை சேர்ந்த சென்ட் ஜோசப் என்ற மீன்பிடி படகு மீது எம். டி சோலீஸ் என்ற வெளிநாட்டு கப்பல் மோதியது. இதில் படகு கடலில் மூழ்கியது. படகில் இருந்த 11 மீனவர்களில் கொல்கத்தாவை சேர்ந்த லவான் தாஸ் (45), அவரது மகன் பாதல் (23) ஆகிய இருவர் கடலில் மாயமானார்கள். மற்ற ஒன்பது மீனவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தை தொடர்ந்து மார்ச் 9ஆம் தேதி முதல் இக்கப்பல் விழிஞ்ஞம் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. விபத்து தொடர்பான வழக்குகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், கப்பல் நிறுவனம் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் இடையே உடன்பாடு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து விழிஞ்ஞம் கப்பல் துறைமுகத்தில் தங்கி இருந்த காலத்திற்கான வாடகை மற்றும் இதர கட்டணங்கள் சுமார் 30 லட்சம் ரூபாயை கேரளா கடல்சார் வாரியத்திற்கு செலுத்தப்பட்டது. இதனை அடுத்து கொச்சி மெர்க்கண்டையில் மரைன் துறையின் முதன்மை அதிகாரி ஜே. செந்தில்குமார் கப்பல் புறப்படுவதற்கான அதிகார பூர்வ உத்தரவை வழங்கினார். தொடர்ந்து கப்பல் விழிஞ்ஞம் கடற்கரையில் இருந்து புறப்பட்டது.
பயணத்திற்கு முன்னதாக கப்பலுக்கு தேவையான எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. வியட்நாம் நாட்டை சேர்ந்த கேப்டன் லே வான் துவான் தலைமையில் 20 மாலுமிகள் இக்கப்பலில் உள்ளனர். கப்பல் புறப்பட்ட தகவலை துறைமுக பொறுப்பாளர் எஸ் வினோ லால் மற்றும் உதவி போர்ட் கன்சல்டன்ட் எம்எஸ் அஜீஸ் ஆகியோர் உறுதிப்படுத்தினர். நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு கப்பல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


