சுசீந்திரம், மே 20 –
நாகர்கோவில் கோட்டார் செட்டித்தெருவில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் வைத்து ஏவுகணை நாயகன் அறக்கட்டளையின் 6ம் ஆண்டு தொடக்க விழா, கல்வி உதவி வழங்கும் “கல்விக்கு உயிர் கொடு” விழா மற்றும் சிறந்த சமூக சேவையாளர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு அறக்கட்டளையின் நிறுவனர் அபிலாஷன் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்.பிஜிவின் ராஜ், சிவராம் மனோகரன், பிரதீஷ், கோகுல், மகேஷ், சதீசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில் ஆசிரியர் பிரியதர்ஷினி மாணவ, மாணவியருக்கு கல்வி முக்கியத்துவத்தை பற்றியும், கல்வி சேவை பற்றியும் ஊக்கமளிக்கும் வகையில் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் தாய் அல்லது தந்தையை இழந்த சுமார் 350 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.



