தருமபுரி, மே 9 –
தருமபுரி மாவட்டத்தில் +2 தேர்வில் 93.49 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 175 பள்ளிகளைச் சேர்ந்த 8,914 மாணவர்கள், 9,600 மாணவிகள் என மொத்தம் 18,514 பேர் +2 தேர்வு எழுதினார்கள். இவர்களில் 8,163 மாணவர்கள், 9,106 மாணவிகள் என மொத்தம் 17,309 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதன்படி தருமபுரி மாவட்டத்தில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி 93.49 சதவீதமாகும் +2 தேர்வு எழுதியவர்களில் 91.35 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி 93.85 சதவிகிதமாக இருந்தது. இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி 2.5 சதவீதம் குறைந்துள்ளது. இந்த ஆண்டு +2 தேர்வில் 95.48 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு மாணவிகளின் தேர்ச்சி 96.55 சதவீதமாக இருந்தது. மாவட்டத்தில் கடந்த ஆண்டு 95.25 சதவீத தேர்ச்சி ஆகும். இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் 1.76 தேர்ச்சி குறைந்துள்ளது. கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு மாணவிகளின் தேர்ச்சி 1.07 சதவீதம் குறைந்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு +2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 4.13 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு தருமபுரி மாவட்டம் +2 தேர்ச்சியில் மாநில அளவில் 13வது இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்து 30வது இடத்தை பிடித்துள்ளது.


