தஞ்சாவூர், மே 8 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளிய 5 பொக்குலின் இயந்திரம், 2 லாரிகளை தஞ்சாவூர் கோட்டாட்சியர் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள மருதகுடி கிராமத்தில் செம்மண் கிராவல் அள்ளுவதற்கு வழங்கப்பட்ட உரிமம் 4 நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது, என்றாலும் தொடர்புடைய நிலத்தில் தொடர்ந்து அனுமதி இன்றி செம்மண் அள்ளப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதையடுத்து தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் நித்யா, தஞ்சாவூர் தாசில்தார் சிவக்குமார் மற்றும் வருவாய் துறை அதிகாரி கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளி வந்தது தெரிய வந்தது.
மேலும் செம்மண் அள்ளுவதற்காகவும், அவற்றைக் கொண்டு செல்வதற்காகவும் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து நிறுத்தப்பட்டிருந்த 5 பொக்லின் எந்திரங்கள், 2 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக வருவாய்த்துறையினர், போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



