கிருஷ்ணகிரி, மே 1 –
கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வட்டம், கங்கோஜி கொத்தூர் அஞ்சல், ஜெகநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெறுவதாக குழந்தைகள் உதவி மைய 1098 க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உத்திரவின் பேரில் குருபரப்பள்ளி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர், கங்கோஜி கொத்தூர் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் மற்றும் குழந்தைகள் உதவி மைய வழக்கு பணியாளர் ஆகியோர் கொண்ட குழுவானது துரிதமாக செயல்பட்டு மேற்குறிப்பிடப்பட்டுள்ள கிராமத்திற்கு கடந்த 29.04.2026 அன்று நேரில் சென்று கள விசாரணை மேற்கொண்டதில் சிறுமிக்கு நடைபெற இருந்த இளம்வயது திருமணமானது தடுத்து நிறுத்தப்பட்டது.
மேலும் மேற்படி சிறுமி, அவர்தம் பெற்றோர் மற்றும் ஊர்பொதுமக்கள் ஆகியோருக்கு இளம்வயது திருமணத்தால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு இளம்வயது திருமண ஏற்பாடு செய்தல் அல்லது நடத்தி வைத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குழந்தை திருமண தடைச் சட்டம் 2006 பிரிவு கீழ் 2 ஆண்டுகள் வரை அல்லது ரூ.100,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்த தண்டனை வழங்கப்படும். குறிப்பாக மேற்படி இளம் வயது திருமணத்தில் துணை நிற்கும் பெற்றோர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு தண்டனை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.



