புதுக்கடை, ஏப். 27 –
தமிழக அரசு கிள்ளியூர் தாலுகாவில் புதிய மாவட உரிமையியல் -உடன் -நீதித்துறை-நடுவர் நீதிமன்றம் நிறுவ ஏற்கனவே அனுமதித்து அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நீதிமன்றம் தாலுகாவில் அனைத்துப் பகுதியினரும் வந்து செல்ல வசதியாக தாலுகாவின் மத்திய பகுதியான புதுக்கடையில் அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இது குறித்து அரசுக்கும் நீதித் துறைக்கும் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் நீதித்துறை மற்றும் அரசு துறை அதிகாரிகள் புதுக்கடை பேரூராட்சிக்கு சொந்தமான சமூக நலக் கூடத்தை ஆய்வு செய்து அதில் தற்காலிக நீதிமன்றம் அமைக்கவும் மற்றும் அலுவலகத்தை அக்கட்டிடத்தின் மேல் மாடியில் கட்டிடம் பேரூராட்சி நிர்வாகம் நீதி துறைக்கு ஒப்படைக்கவேண்டும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் பேரூராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி மேல் மாடி கட்டிடம் கட்ட நிர்வாக அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்தை அணுகியது. ஆனால் அதிகார பீடத்தில் இருந்து கொண்டு சிலர் அனுமதி வழங்குதல் தொடர்பாக இடையூறு ஏற்படுத்துவதாக தெரிகிறது. மேலும் புதுக்கடை அருகே அரசு பொதுப்பணித் துறைக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் காலி நிலம் உள்ளது. அந்த நிலத்தில் நிரந்தர நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் தாலுகாவின் மத்திய பகுதியான புதுக்கடை பேரூராட்சியில் தற்காலிக நீதிமன்றம் நிறுவ (வாகனம் நிறுத்த வசதியுடன்) அமைவிட தனியார் கட்டிடம் வழங்க தனியார் அமைப்பும் தயாராக உள்ளது. எனவே புதிதாக நிறுவ உள்ள தற்காலிக / நிரந்தர நீதிமன்றம் கிள்ளியூர் தாலுகாவில் மத்திய பகுதி புதுக்கடையில் அமைய அனைத்து சாத்தியக்கூறுகள் உள்ளது. எனவே அரசு மற்றும் நீதித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிள்ளியூர் தாலுகா மத்திய பகுதி நீதித்துறை அமைப்பு குழு கோரிக்கை விடுத்துள்ளது.


