நாகர்கோவில், ஏப். 22 –
குமரியில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதனடிப்படையில் மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி மையத்தினை எளிதில் கண்டறியும் விதமாக வாக்குச்சாவடி நிலைய முகப்பில் ஒவ்வொரு வண்ணத்திலும் வாக்குச்சாவடி மையத்தினை குறிப்பிட்டு, வழிகாட்டி பதாகைகள் வைக்கப்பட்டதோடு, முகப்பிலிருந்து வாக்குச்சாவடி மையம் வரை அந்தந்த நிற வர்ணம் பூசப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் வாக்காளர்களின் வசதிக்கேற்ப நிழல் பந்தல், குடிநீர், கழிப்பறைகள், கைப்பேசி பாதுாப்பு பை, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விளையாட்டு பொருட்களுடன் கூடிய தனிப்பகுதி உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஒரு பெண்கள் வாக்குச்சாவடி மையம், மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி மையம், மாதிரி வாக்குச்சாவடிமையம் மற்றும் இளைஞர்களுக்கான வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பத்மநாபபுரம், விளவங்கோடு மற்றும் குளச்சல் ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளி, மாதிரி வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் அழகு மீனா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வாக்காளர் பெருமக்களாகிய அனைவரும் நாளை (23.04.2026) தவறாமல் வாக்குச்சாவடிக்கு சென்று, தங்கள் வாக்கினை 100 சதவீதம் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் கூறினார். நடைபெற்ற ஆய்வில் அலுவலர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



