தென்தாமரைகுளம், ஏப். 18 –
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை யொட்டி குமரிமாவட்டத்தில் தேர்தல் முறைகேடு நடைபெறாமல் தடுக்கவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கவும் தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.
6 சட்டமன்ற தொகுதிகளிலும் 8 மணி நேர சுழற்சி அடிப்படையில் பறக்கும் படைகளும், நிலையான கண்காணிப்பு படைகளும் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி அருகே உள்ள நரியன்விளை பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், எந்த வித ஆவணங்களும் இன்றி ரூ.2,83,500 பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அந்த காரில் வாக்காளர் பட்டியல் புத்தகங்கள் மற்றும் தி.மு.க. தேர்தல் விளம்பர நோட்டீசுகள் இருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து கார் மற்றும் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது குறித்து தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் தி.மு.க. பிரமுகர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


