குளச்சல், ஏப். 18 –
குளச்சல் கடல் பகுதியில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமரங்களில் மீன்பிடித் தொழில் நடைபெறுகிறது. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிகளுக்கு சென்று தங்கி மீன்பிடித்து விட்டு குறைந்த பட்சம் 10 நாட்கள் கழிந்து கரைக்கு வருவது வழக்கம்.
ஆழ்கடல் பகுதியில் கேரை, சுறா, கணவாய், இறால் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். தற்போது குளச்சல் பகுதியில் கேரை மீன் சீசன் ஆக இருந்தும், அந்த மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் ஆழ் கடல் பகுதியில் சென்று மீன்கள் கிடைக்காமல் விசைப்படகுகள் ஏமாற்றத்துடன் கரை திரும்புவது வாடிக்கையாக உள்ளது. ஒரு சில படகுகளில் மீன் பிடிக்க செல்பவர்கள் சிறிதளவு மீன்களுடன் கரை திரும்புகின்றனர். அவர்களுக்கும் சம்பளம் மற்றும் டீசல் செலவிற்கு கூட வருமானம் கிடைக்காத நிலை உள்ளது.
இந்த நிலையில் நேற்று கரை திரும்பிய 2 விசைப்படகுகளில் குறைந்த அளவு சிறிய இறால் எனப்படும் புல்லன் மீன்கள் கிடைத்தன. அவற்றை மீனவர்கள் ஏலக் கூடத்தில் இறக்கி வைத்து விற்பனை செய்தனர். இந்த வகை புல்லன் இறால் கிலோ தலா ரூ.50க்கு விலை போனது. இது வழக்கமான விலை விட குறைவு.
இந்த புல்லன் இறால் முன்பு கிலோ ரூ.70 வரை போனதென்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விசைப்படகு உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குளச்சலில் போதிய மீன்கள் கிடைக்காததால் மீன்பிடித் தொழில் மிகவும் மந்தமான நிலையில் உள்ளது.



