கன்னியாகுமரி, மார்ச் 27 –
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறுகையில்: போர் சூழல் நேரத்திலும் கூட மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை ரத்து செய்துள்ளது. இதே போல் தமிழக அரசும் கலால் வரியை ரத்து செய்ய வேண்டும். பெண்களை இழிவாக பேசும் திமுகவினர் மீது தமிழக முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதிப்பிற்குரிய அண்ணாமலை தேர்தலில் நிற்பது தொடர்பாக தலைமை முடிவு செய்யும் என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வேறு ஏதும் கட்சிகள் வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, “தற்போது கருத்து கூற முடியாது” எனவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் என தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளிவருகிறது. அதன் அடிப்படையில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என கூறினார்.
தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு என்பது பரஸ்பரம் பேசி முடிவு செய்யப்பட்ட ஒன்று, சில இடங்களில் அதிமுகவுக்கு அதிகமாக கொடுத்துள்ளோம். சில இடங்களில் எங்களுக்கு அதிகமாக கிடைத்துள்ளது. அதிமுக தொகுதிகளை பாஜக பெற்றுள்ளது என்பது அவதூறு பிரச்சாரம். வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் தொகுதிகளை கேட்டு வாங்கி விட்டோம் என கூறுவது சரி இல்லை.
யார் வெற்றி பெற்றாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான். தற்போது இருக்கும் முதல்வர் மக்களை பற்றி கவலை கொள்ளாமல் 5 ஆண்டுகளாக குடும்ப பிரச்சினையை மட்டுமே பார்த்துக் கொண்டு வந்தார். ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதே அடிப்படை. நான் சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறேன் எனவும் தெரிவித்தார்.



