நாகர்கோவில், மார்ச் 19 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் குளச்சல் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள சரண ஜோஸ் என்பவர் நேற்று கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் 24 மணி நேரம் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் செயல்பாடுகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் நேரடி ஒளிபரப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்தார். பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு படைகளின் நடமாட்டத்தை ஜிபிஎஸ் கருவியின் மூலம் கண்காணிக்கும் முறையை சோதித்தார். தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக பெறப்படும் புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தேர்தல் செலவினங்களை முறையாக கண்காணிக்கவும், எவ்வித முறைகேடுகளும் இன்றி ஜனநாயக கடமையாற்றுவதை உறுதி செய்யவும், கட்டுப்பாடு அறை பணியாளர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் உடன் இருந்தனர்.



