தென்காசி, பிப். 23 –
தமிழக வெற்றி கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தென்காசி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசியதாவது: இந்திய துணைக் கண்டத்தில் 2 வல்லமை படைத்த கட்சிகளை வீழ்த்துவேன் என்ற ஆளுமை படைத்த ஒரே தலைவர் விஜய் தான் எனவும், விஜயின் அரசியலைப் பார்த்து தான் திமுக அரசியல் செய்கிறது, விஜயை காப்பி அடித்தால் தான் கரை சேர முடியும் என திமுகவினர் நம்புகிறார்கள்.
தமிழகத்தை கடன் சுமையிலும், போதையிலும் தள்ளிவிட்டு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த மாநிலமாக தமிழ்நாட்டை தள்ளி உள்ளது திமுக. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சட்டப்பேரவை முடியும் நாளன்று சம்பிரதாயத்திற்காக ஓ.பன்னீர்செல்வம் சந்தித்திருக்கிறார். 3 முறையாக முதல்வராக இருந்த அவர் தன்னுடைய முடிவு குறித்து இன்னும் சிந்தித்துக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது வருகின்ற 24-ம் தேதி ஜெயலலிதா அம்மாவின் பிறந்தநாள் அன்று சசிகலா பசும்பொனில் புதிய கட்சி தொடங்குகிறார். அதில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளதாக நம்புகிறேன் என அவர் கருத்து தெரிவித்தார். மேலும் அந்தப் புதிய கட்சியும் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்துக்கு, தான் கருத்து தெரிவிக்கும் அளவிற்கு தன்னுடைய தகுதி கீழே செல்லவில்லை எனவும், திமுக குறித்து முன்பு குற்றம் சாட்டிய மதிமுக தலைவர் வைகோ, தற்போது திமுக தான் ஆட்சிக்கு வரும் என கருத்து தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த நாஞ்சில் சம்பத், எந்தப் பறவையும் முட்டைக்கு திரும்பிய சரித்திரம் இல்லை. ஆனால் முட்டைக்கு திரும்பிய முட்டாள் பறவை வைகோ என கடுமையாக அவரை சாடினார்.
நகராட்சி நிர்வாக அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அவர் உடனடியாக அமைச்சர் பதவி ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் த.வெ.க கூட்டணிக்காக எந்த கட்சிகளையும் விலைக்கு வாங்க தயார் இல்லை எனவும் தனியாக நின்று வெல்ல முடியும் என்கின்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
த.வெ.க-வுடன் கூட்டணி சேர வேண்டும் என்கின்ற தாகமும், தவிப்பும் சில கட்சிகளுக்கு உள்ளது. அவர்கள் எங்களுடன் விரைவில் கூட்டணி வைப்பார்கள். குறிப்பாக, மார்ச் 9-ம் தேதி திருச்சியில் திமுக மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்துகிறது. அன்றைய தினம், தமிழக வெற்றி கழகத்தின் பொலிட்டிக்கல் பாம் வெடிக்கும். திமுகவுடன், காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளதாக ராகுல் காந்தி ஒருபோதும் சொல்லவில்லையே, இப்பொழுது இருக்கிறோம், இனிமேலும் இருப்போம் என சொன்னார்களா? தமிழக வெற்றி கழகமும், காங்கிரசும் கூட்டணி அமைத்தால் 234 தொகுதியிலும் வெற்றி பெறுவோம்.
திமுகவுடன் தே.மு.தி.க கூட்டணி வைத்தது தொடர்பாக பேசிய நாஞ்சில் சம்பத் பழம் நழுவி பணம் கலந்த பாலில் விழுந்து விட்டதாக அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழக வெற்றி கழகத்தின் தென்காசி மாவட்ட செயலாளர் ராஜபிரகாஷ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.



