சுசீந்திரம், ஜன. 2 –
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழாவிற்காக கடந்த 25ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. மூன்றாம் திருவிழா அன்று இரவு மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஐந்தாம் திருவிழா அன்று கருட தரிசன நிகழ்ச்சியும் ஏழாம் திருவிழா அன்று கைலாச பருவத வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
எட்டாம் திருவிழா நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜ பெருமானை அமரச் செய்து பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்ப தாணுமாலய சுவாமி கோவில் தெற்கு பாகத்தில் அமைந்துள்ள பேரம்பலம் நடராஜமூர்த்தி சன்னதி முன்பு ஆனந்த திரு நடன காட்சி நடைபெற்றது.
காலை 10 மணிக்கு நடராஜ பெருமானுக்கும் சிவகாமி அம்மனுக்கும் அலங்கார மண்டபத்தில் அஷ்ட்டாபிஷேகமும் மண்டகப்படி நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு நடராஜப் பெருமானுக்கும் சிவகாமிய அம்பாளுக்கும் அலங்கார மண்டபத்தில் வைத்து அஷ்ட அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் முக்கிய விழாவான தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதர் பிட்ச்சாடனராக திரு விதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9:15 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட விநாயகர் தேரில் விநாயகரும் சுவாமி தேரில் சுவாமியும் அம்பாள் தேரில் அம்பாளையும் அமரச் செய்து தேரை பக்தர்கள் தொட்டு ரத வீதியை ஒரு முறை வலம் வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு சுவாமி தந்த பல்லக்கில் எழுந்தருளள் நிகழ்ச்சியும் இரவு 11 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் இரவு 12 மணிக்கு தனது தாய் தந்தையர்களின் திருவிழாவில் பங்கெடுத்துக்கொள்ள வருகை தந்த கோட்டாறு வலம்புரி விநாயகர் மருங்கூர் சுப்பிரமணியசுவாமி வேளிமலை குமாரசுவாமி ஆகிய சுவாமிகள் தங்களது தாய் தந்தையர்களை மூன்று முறை வலம் வந்து பிரிந்து செல்லும் சப்தா வர்ண காட்சி நடைபெறுகிறது.
பத்தாம் திருவிழாவான நாளை காலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் மாலை 5 மணிக்கு நடராஜர் திருவிதிஉலா வரும் நிகழ்ச்சியும் இரவு 9:30 மணிக்கு திரு ஆறட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தேரோட்ட நிகழ்ச்சி முன்னிட்டு காவல்துறை, மருத்துவத்துறை, தீயணைப்புத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சுசீந்திரம் பேரூராட்சி சார்பில் குடிநீர் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டன. போக்குவரத்திற்கு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வரும் வாகனங்கள் ஆசிரமம் நான்கு வழி பாதை வழியாக திருப்பி விடப்படுகிறது.
அதுபோல கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாகனங்கள் கற்காடு நான்கு வழி சாலை வழியாக திருப்பி விடப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி, கோவில் கண்காணிப்பாளர் ஆனந்தன், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், தாணுமாலய சுவாமி கோயில் பக்தர்கள், பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.



