தக்கலை, டிச. 8 –
திருவனந்தபுரத்திலிருந்து குளச்சலுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ் ஒன்று இன்று சென்று கொண்டிருந்தது. ஜார்ஜ் (53) என்பவர் பஸ்சை ஓட்டினார். தக்கலை அருகே உள்ள காட்டாதுறை பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கிக் கொண்டிருந்தபோது, அதே சாலையில் வேகமாக வந்த டாரஸ் லாரி திடீரென கட்டுப்பாட்டு இழந்து, நின்று கொண்டிருந்த அரசு பஸ்ஸின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.
இதில் பஸ் டிரைவர் ஜார்ஜ் தனது இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே சாலையில் விழுந்தார். அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பஸ்ஸில் இருந்த பயணி அமலா (45) என்ற பெண் பயணிக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. பஸ்ஸில் இருந்த பயணிகள் எல்லாரும் அலறியடித்து கீழே இறங்கி ஓடினார்கள். உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
தக்கலை போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். காயம் அடைந்தவர்கள் தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் அமலா சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ளார். சம்பவம் குறித்து ஜார்ஜ் அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் விசாரணை நடத்தி, லாரி டிரைவர் நாங்குநேரியை சேர்ந்த சங்கரலிங்கம் (37) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


