போகலூர், நவ. 25 –
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் செயல்பட்டு வரும் 109 மதுபான சில்லறை விற்பனை கடைகளில் சென்னை ஹைகோர்ட் வழிகாட்டு நெறிமுறைகளின் படி மது நுகர்வோர் விட்டு செல்லும் காலி மதுபான பாட்டில்கள் காரணமாக ஆங்காங்கே உடைந்து கிடந்து பொதுமக்களுக்கும் வன விலங்குகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும் பொருட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளிலும் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் 26.11.2025 அன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தின் கீழ் மதுபானத்தின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதலாக கடை எண் பொறிக்கப்பட்ட ரூ பத்துக்கான சிறப்பு ஸ்டிக்கர் ஒட்டி மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். மது நுகர்வுக்கு பின்னர் காலி பாட்டில்களை ஒப்படைக்கும் பட்சத்தில் அவர்கள் செலுத்திய கூடுதல் தொகை ரூ.10 திரும்ப அவர்களிடமே வழங்கப்படும். இதனால் வயல்வெளிகளில் தெருவோரங்கள் ஆகியவற்றில் உடைந்த மதுபான காலி பாட்டில்கள் கிடந்து பொதுமக்களுக்கும் வன விலங்குகளுக்கும் மேலும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.
இத்திட்டம் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளிலும் காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் 26 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.



