கன்னியாகுமரி, நவ. 24 –
கன்னியாகுமரி பூம்புகார் படகுத் துறையில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் படகுத் துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் பணி நிரந்திரம் வழங்கப்படாததைக் கண்டித்தும், தற்போதைய ஒப்பந்த விதிகளில் உள்ள முரண்பாடுகள் மற்றும் குளறுபடிகளை உடனடியாகக் களைய வலியுறுத்தியும் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முக்கிய கோரிக்கைகள்
ஒப்பந்தப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர் நல விதிகளுக்கு முரணாக உள்ள ஒப்பந்த முறைகளைச் சீரமைக்க வேண்டும். ஊழியர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் ஊதிய உயர்வு மற்றும் இதர சலுகைகள் வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என யூனியன் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் முழக்கமிட்டனர்.



