நாகர்கோவில், நவ. 3 –
கன்னியாகுமரி மாவட்டம் காற்றாடித்தட்டு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோவில் அருகே திறந்தவெளி கொட்டகை அமைத்து தர இப்பகுதி மக்கள் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். இக்கோரிக்கையினை ஏற்று இப்பணிகளை மேற்கொள்ள கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்ட நிதியிலிருந்து ரூ. 25 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா இப்பகுதியில் நடைபெற்றது. அடிக்கல் நாட்ட வருகை தந்த தளவாய்சுந்தரம், இங்குள்ள அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் இரும்பிலான திறந்தவெளி கொட்டகை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வீராசாமி, ஒன்றிய விவசாய அணி செயலாளர் முருகன், ஒன்றிய தொழிற்சங்க செயலாளர் பரமேஸ்குமார், கிளைச் செயலாளர் செல்வம், ஊர் தலைவர் ஜெகன், வழக்கறிஞர் தங்கசாமி, பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



