மதுரை, நவம்பர் 01 –
மதுரை அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: இந்தியாவிற்கே வழிகாட்டும் திராவிட மாடல் ஆட்சி என்று ஸ்டாலின் தனக்குத்தானே பெருமையாக பேசுகிறார் உண்மை தான் தமிழகம் இன்றைக்கு ஊழல் செய்வதில் இந்தியாவிற்கே வழிகாட்டி வருகிறது. இன்றைக்கு பத்திரப்பதிவுத்துறை, மின்வாரியத்துறை, டாஸ்மார்க், உள்ளாட்சி துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 35 துறைகளில் செய்த ஊழல் பணத்தை மீட்டால் தமிழ்நாட்டில் மொத்த கடனையும் அடைத்து விடலாம்.
மேலும் பி.டி.ஆர். தியாகராஜன் நிதியமைச்சராக இருந்த போது ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடியை சம்பாதித்து அதை எங்கே வைப்பது என்று உதயநிதியும் சபரிசனும் தவித்து வருகிறார்கள் என்று கூறினார். பொங்கல் பரிசு வழங்கியதில் 500 கோடி ஊழல் செய்தார்கள். இன்னைக்கு டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு பத்து ரூபா வாங்கி நாளுக்கு ஒரு கோடி ரூபாய் ஊழல் செய்கிறார்கள்.
அமைச்சர் நேரு வகித்து வரும் உள்ளாட்சித் துறையில் 5000 கோடியில் சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை செய்துள்ளோம் இதனால் ஒரு சொட்டு கூட நீர் தேங்காது என்று சொன்னார்கள் ஆனால் ஒரு மழைக்கே சென்னை தத்தளிக்கிறது இதில் மாபெரும் முறைகேடு நடந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
குறிப்பாக தற்போது உள்ளாட்சித் துறையில் 2,538 பணியாளர்கள் நியமனத்தில் மிகப்பெரிய ராக்கெட் வேகத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது . இன்றைக்கு ஒரு கோடியே 30 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் அங்கு பணத்துக்கு தான் வேலை படிப்புக்கு வேலை இல்லை என்று திமுக அரசு உருவாக்கி உள்ளது.
இன்றைக்கு அமலாக்குத்துறை தமிழக டிஜிபிக்கு 252 பக்கங்கள் கொண்ட ஒரு அதிர்ச்சியான கடிதங்களை அனுப்பி உள்ளது. அதில் அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் 30 கோடி வங்கிகடன் மோசடி தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து சென்னை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் சோதனை செய்துள்ளது இதில் பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு ஆவணம் செய்த போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்ய பணிக்கு ஏற்றார் போல் 25 லட்சம், 35 லட்சம் வசூல் செய்து ஏறத்தாழ 800 கோடி அளவில் ஊழல் நடந்திருப்பதாக கூறியுள்ளது.
மேலும் மாநகராட்சி, நகராட்சிகளில் 2569 பணிகள் காலியாக இருந்தது. இதற்காக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் வழிகாட்டுதலின் படி தேர்வு நடத்தப்படும் என்று கூறினார்கள். இதனை தொடர்ந்து 591 இடங்களில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். ஆனால் தேர்வு முடிவுக்கு வரும் முன்பே பணம் வசூலிக்கப்பட்ட நபர்களுக்கு தகவல் கசியவிடப்பட்டன. இதில் திரை மறைவாக இருக்கும் யார் அந்த சார்?
இன்றைக்கு சாமானிய இளைஞர்கள் இரவு எல்லாம் கண்விழித்து படித்து பெறப்பட்ட மதிப்பெண்கள் எல்லாம் மாற்றப்பட்டுள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால் முதலமைச்சரே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பணி நியமன ஆணயை தனது
கரங்களால் வழங்கி இந்த அரசு ஊழல் கறை படிந்த அரசு என்பதை நிரூபித்து விட்டார்.
குறிப்பாக இதற்குரிய லஞ்சம் பணம் வங்கி வாயிலாகவும் அமைச்சர் நேரு, அவரது தம்பி ரவிச்சந்திரன் ஆகியோரின் நிறுவனங்களின் பெயரில் பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


