சுசீந்திரம், அக். 24 –
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இரண்டு நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் பழையாற்றில் கரைபுரண்டு ஓடுகின்றது. பெருவெள்ளக்காலங்களில் பழையாற்று கரையோரம் உள்ள கவிமணி நகர், சாஸ்தாநகர், தாணுமாலய நகர், கற்காடு, காக்கமூர், ஆசாத் நகர் ஆகிய ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்து சேதங்கள் விளைவிக்கின்றன. முன்பு காலங்களில் மழைநீர் வயல்வெளி வழியாக பறந்து பாய்ந்து ஓட முடியும் என்பதால் தண்ணீர் தேங்காது.
ஆனால் தற்போது வயல் நடுவே நான்கு வழிச்சாலையும் செல்வதால் தண்ணீர் வழிந்து ஓடும் நிலை இல்லை. மழைநீர் தேங்கும் நிலையிலே உள்ளது. மேலும் மழை நீரோடு விஷப் பூச்சிகளும் வீட்டிற்கு செல்லும் நிலை உள்ளது. இதனால் பழையாறு நிறைந்து தண்ணீர் சாலை கடந்து ஊருக்குள் வந்து விடுமோ என்ற கலக்கத்திலே மக்கள் உள்ளனர். மழை பெய்து பழையாற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.



