கிருஷ்ணகிரி, செப். 15 –
“தமிழ்நாட்டை தெற்கு ஆசியாவிலேயே சிறந்த மாநிலமாக உருவாக்கி காட்டுவேன்,” என தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார். கிருஷ்ணகிரியில் நடந்த அரசு விழாவில் பல்வேறு துறைகள் சார்பில், 2.23 லட்சம் பயனாளிகளுக்கு, 2,052 கோடியே, மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கி பேசியதாவது:
இரும்பின் தொன்மையை நிறுவ உதவிய மயிலாடும்பாறை அகழ்வாய்வு நடந்த பகுதியான, வரலாற்று பெருமை, புகழ் வாய்ந்த கிருஷ்ணகிரியில் இந்த சிறப்பான நிகழ்ச்சி நடக்கிறது. மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி மற்றும் கோபிநாத் எம்.பி., மதியழகன், பிரகாஷ், ராமச்சந்திரன் போன்ற எம்.எல்.ஏ.,க்களும் சிறப்பாக பணி ஆற்ற கூடியவர்கள். என்னிடம் கோரிக்கைகளை வழங்குவதோடு அதை நிறைவேற்றி செல்பவர்கள். மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் சிறப்பாக செயல்படுவதாக கூறினர். அதனால் தான் இன்று ஒரே நேரத்தில், 2 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முடிகிறது. அவருக்கும் பாராட்டுகள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு, தி.மு.க., ஆட்சிக்காலத்தின் தான் அடித்தளம் போடப்பட்டது. இரண்டாம் சிப்காட் வளாகம், போச்சம்பள்ளி, ஓசூரில் துணை மின்நிலையங்கள், விஸ்வநாதபுரம் ஐ.டி., பூங்கா, ஓசூரில் மின்னணு தொழில் வளாகம் என பல்வேறு திட்டங்களை வழங்கி உள்ளோம். கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்தில் இருந்தபோது மகளிர் சுய உதவி குழுக்கள் தொடங்கப்பட்டதும் இங்குதான். மக்களை தேடி மருத்துவம் திட்டம் துவங்கப்பட்டதும் இங்குதான். அதுபோல தி.மு.க.,வும் கிருஷ்ணகிரிக்கும் நீண்ட நெடிய தொடர்பு உண்டு.
தற்போது 1,212 கோடி ரூபாய் மதிப்பில் 85,711 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது. ஊரகப்பகுதிகளில் மட்டும்தான் பட்டா வழங்கப்பட்டது. தற்போது நகரப்பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வருபவர்களுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி நகராட்சியில், 1,802 பேருக்கும், ஓசூர் மாநகராட்சியில், 3,222 பேருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி நகராட்சியில், 40 ஆண்டுகளுக்கு மேலாக புறம்போக்கு நிலமாக வகைப்படுத்தப்பட்ட மனைகள் ரயத்துவாரி நத்தம் மனையாக மாற்றி உள்ளோம். இதன் மூலம் கிருஷ்ணகிரி நகராட்சியில் 3,050 பேரும் ஓசூர் மாநகராட்சியில், 8150 பேருக்கும் நத்தம் மனை கணினி பட்டா வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தி.மு.க., ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஓசூர் மருத்துவமனையை தரம் உயர்த்த, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு, அரசு கலை மற்றும் கல்லூரிகளில், புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள், ஆலியாளம் அணைக்கட்டு, தென்பெண்ணை ஆற்று நீர் மூலம் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள் பயன்பெற 56 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
எண்ணேகொள் அணையில் இருந்து நீரை வறண்டபகுதிக்கு கொண்டு செல்ல, 45 கோடி ரூபாய், பாரூர் ஏரியில் இருந்து கிழக்கு கால்வாய் அமைத்து போச்சம்பள்ளி, ஊத்தங்கரை பகுதிகளின் 33 ஏரிகளுக்கு நீர் நிரப்ப, 75 கோடி ரூபாய் ஒதுக்கியது. கீழ்கெலவரப்பள்ளி அணைப்பகுதிகள் புனரமைக்க 30 கோடி ரூபாய், புதிய, 4 துணை மின் நிலையங்கள், வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தில் 2,597 விவசாயிகளுக்கு 7.75 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.
தானம்பட்டி, கும்மனுார், மாரம்பட்டி, ஆலவக்கம்பட்டி, எண்ணேகொள், கம்மம்பள்ளி ஆகிய, 6 கிராமங்களில், 6 மரகத பூஞ்சோலை அமைக்கப்பட்டுள்ளது. ஓசூர் மாநகராட்சியில், 951.37 கோடி ரூபாய் மதிப்பிலான, 417 பணிகளில், 323 பணிகள் முடிந்துள்ளது. 94 திட்டப்பணிகள் நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களால், 6,68,231 பேர் பயன்பெற்று வருகின்றனர். இவ்வளவு திட்டங்களுடன் தற்போது புதிதாக, 5 திட்டங்களையும் அறிவிக்கிறேன். அதன்படி தளி ஊராட்சி ஒன்றியத்தில், கிராம மக்கள், பழங்குடியினர் ஒன்றிய தலைமையிடத்திற்கு செல்ல நீண்ட தூரம் செல்ல வேண்டி இருப்பதால், அஞ்செட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும்.
கெலமங்கலம் மலை கிராமங்களில், 12.43 கோடி ரூபாய் மதிப்பில் தார் சாலைகள், கெலமங்கலம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, புறவழிச்சாலை அமைக்க அறிக்கை தயாரிக்கும் பணி, ஓசூர் மாநகராட்சியில், என்.எச்.,44, என்.எச்.,844 இணைக்கும வகையில் புதிய சாலை அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும் ஓசூர் மாநகராட்சியில் எல்சி 104 ரயில்வே கேட் பகுதியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
இந்நிகழ்ச்சிக்கு நாங்கள் 10:00 மணிக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். நாங்கள் ஓசூரிலிருந்து ஒன்றரை மணி நேரத்தில் இங்கு வந்து இருக்கலாம். ஆனால், வருகின்ற வழியெல்லாம் ஆங்காங்கு பெண்கள், இளைஞர்கள், ஆண்கள், முதியவர்கள், விவசாயிகள் சாலையின் இருபுறத்திலும் நின்று எங்களை வரவேற்று மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினர். அதையெல்லாம் முடித்துவிட்டு வருவதற்கு தாமதமாகிவிட்டது. தாமதமாக வந்த காரணத்தால் முதலில் உங்களிடத்தில் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். தி.மு.க., அரசின் மீதும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீது காட்டக்கூடிய பாசம், அன்பினால்தான் இங்கு வர தாமதம் ஆகியிருக்கிறது. இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமான எந்த விமர்சனத்தையும் வைக்க முடியாமல் வயிற்றெரிச்சல் காரணமாக தி.மு.க தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று பொத்தாம் பொதுவாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகள் அல்லாமல் பல்வேறு திட்டங்களும் நிறைவற்றப்பட்டுள்ளன. பல திட்டங்கள் இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக உள்ளது என தமிழ்நாட்டை பல்வேறு கட்டுரைகள் மூலம் பத்திரிக்கைகள் வெளியிடுகிறது. வட இந்திய யூடியூப் சேனல்கள் கூட திராவிட மாடலை பற்றி அம்மாநில மக்களுக்கு சொல்லி கொண்டுள்ளனர். இதையெல்லாம் தெரிந்தும் எதிர்கட்சிகள் மறைக்க விரும்புகின்றனர்.
மலிவான அரசியல் செய்யும் அவர்களுக்கு இல்லாவிட்டாலும் உங்களுக்கு அதை கூற வேண்டும் என்பதற்காக மூன்று அமைச்சர்கள் நிருபர்களை அழைத்து விளக்கமளித்தனர். அதில், தி.மு.க., அளித்த, 505 வாக்குறுதிகளில், 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 40 அறிவிப்புகள் மத்திய அரசின் பரிசீலனையிலும், 64 திட்டங்களுக்கு போதிய நிதி இல்லை எனவும் கூறினர்.
நீட் தேர்வு விலக்கை எங்களால் நிறைவேற்ற முடியவில்லை. அதை நாங்கள் மறுக்கவில்லை; ஆனால் தற்போது நிறைவேற்ற முடியவில்லை. சட்டமியற்றி தீர்மானம் அனுப்பி வைத்தோம், ஆளுனர் மூலம் முட்டுக்கட்டை போட்டனர். சட்டப்போராட்டம் நடத்தினோம். மத்தியில் நமது கூட்டணி வரும் என எதிர்பார்த்தோம். தமிழகமும் 40க்கு 40 வெற்றியை கொடுத்தாலும் மத்தியில் பா.ஜ., அரசு வெற்றி பெற்றது. அதுவும் மைனாரிட்டி அரசாக உள்ளது. நாட்டு மக்களுக்கு எதிரான ஆட்சி நீடிக்காது. மாநில உரிமைகளை காக்கும் ஆட்சி விரைவில் அமையும்.
வெளிநாட்டு பயணத்தை, இ.பி.எஸ்., விமர்சிக்கிறார் அவரும் வெளிநாடு சென்றார். அவர் சென்று வந்து அறிவித்ததில், கால்வாசி திட்டங்கள் கூட வரவில்லை. ஆனால் நாம்போட்ட ஒப்பந்தத்தில், 77 சதவீத நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன. மற்ற நிறுவனங்களும் வரும். தமிழகத்தை இந்திய அளவில் அல்ல, தெற்காசியாவிலேயே முன்னேறிய மாநிலமாக உருவாக்கி காட்டுவேன். இது என்னுடைய உறுதி.
அவதூறுகள், வீண்பழி, பொய் இதை பற்றி கவலைப்படுபவன் நான் அல்ல. 50 ஆண்டுகளாக் அதை கடந்துதான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவோம். அடுத்தும் திராவிட மாடல் ஆட்சி தான். தி.மு.க.,வின் மக்களாட்சி காலமெல்லாம் தொடரும். தமிழ்நாடு மேலும் வளரும் என பேசினார். இந்த நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்களும் திமுக நிர்வாகிகளும், பொதுமக்களும், பயனாளர்களும், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



