களியக்காவிளை, செப். 15 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில்
ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு உறியடி என்ற கண்ணன் விளையாட்டு நடைபெற்றது. சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏராளமான மக்கள் கண்டு மகிழ்ந்தனர்.
கேரளா மற்றும் கேரளாவை ஒட்டிய கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று செப்டம்பர் 14ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடினர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மீனச்சல் ஶ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலில் ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி திருவிழா கடந்த பத்தாம் தேதி தொடங்கி ஐந்து நாள் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கிருஷ்ண ஜெயந்தி நாளான நேற்று மஹா கணபதி ஹோமம், கலச பூஜை கலசாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு உறியடி என்ற கண்ணன் விளையாட்டு நடைபெற்றது. இதில் சிறுவர்கள் கண்ணன், ராதை போன்ற வேடம் அணிந்து கிருஷ்ணரின் பால்ய கால லீலைகள், குறும்புத்தனம் உள்ளிட்ட கிருஷ்ண அவதார கதைகளை தத்ரூபமாக நாதஸ்வரம், தவில் மேளத்திற்கு இணங்க நடனமாடி நடித்து காட்டினர். கண்கவரும் இந்த உறியடி நிகழ்வினை மீனச்சல் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கண்டு மகிழ்ந்தனர்.
தொடர்ந்து ஆலயத்தில் சமபந்தி விருந்து நடைபெற்றது. மாலையில் சிறப்பு தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற உள்ளது. இரவு 12 மணிக்கு கிருஷ்ண ஜெயந்தி விசேஷால் பூஜையும் நடைபெற்றது. இந்த கிருஷ்ண ஜெயந்தி திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்களும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.



