குளச்சல், செப் – 24
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள குறும்பனையை சேர்ந்த மீனவர்கள் தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். வழக்கம் போல் அவர்கள் நேற்று முன்தினம் மாலை சாஜி என்பவருக்கு சொந்தமான ஃபைபர் வள்ளத்தில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்றனர். தொடர்ந்து நேற்று அதிகாலை சுமார் 3:30 மணியளவில் துறைமுகத்திலிருந்து சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது இனயம் புத்தன்துறை பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஆறு வள்ளங்களில் சென்று குறும்பனை மீனவர்கள் சுற்றி வளைத்து, இந்தப் பகுதியில் மீன் பிடிக்க கூடாது என்று கூறி மிரட்டி உள்ளனர். தொடர்ந்து கம்பி, வாள் போன்ற ஆயுதங்களால் அவர்களை தாக்கி உள்ளனர். மேலும் குறும்பரை மீனவர்களின் 6 செல்போன்கள், ஜிபிஎஸ் ஒயர்லெஸ், வீஞ்சி ஆகிய கருவிகளை தூக்கி கடலில் வீசி உள்ளனர்.
இதனை தடுத்த மீனவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் குறும்பனை மீனவர்கள் ஜெகன் (41) ஆசிஸ் ( 20 ) பீட்டர் (46), ஆல்பி (60, ஸ்டீவன் (70), சாஜி (34),பினு (28), லெபித்தூஸ் (42) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த எட்டு மீனவர்களும் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கடலில் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.