நாகர்கோவில் நவ 27
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று 75வது அரசியலமைப்பு விழிப்புணர்வு பேரணியை மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) ஜோதிமணி , மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம், முன்னிலையில் கொடியசைந்து துவக்கி வைத்தார்.
நம் இந்தியா நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ம் தேதி அரசியலமைப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1949ம் ஆண்டு நவம்பர் 26ம்தேதி நம்முடைய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நம்முடைய அரசியலமைப்பு சட்டம் பல்வேறு நெருக்கடிகளுக்கும், இன்னல்களுக்கும் மத்தில் 75ம் ஆண்டு காலம் பயணித்து, நாட்டின் ஒருமைப்பாட்டையும் கூட்டாட்சி கட்டமைப்பையும் எல்லா தருணங்களிலும் அப்படியே தக்க வைத்திருக்கிறது.
மேலும் அரசியலமைப்பில் உள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை பற்றி அனைத்து தரப்பட்ட மக்களும் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையிலும், இது நாள் வரை தேசம் கடந்து வந்த பாதைகள் குறித்தும், இந்தியாவின் பலதரப்பட்ட கட்டமைப்புகளை அறிந்து கொள்ளும் வகையிலும், நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நம் முன்னோர்களை நினைவு கூறும் வகையிலும் விழிப்புணர்வு பேரணி துவக்கி வைக்கப்பட்டது.
இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து துவக்கி மாவட்ட நீதிமன்ற வரை நடைபெற்றது. இப்பேரணியில் எஸ்.எம்.ஆர்.வி அரசு தொழில்நுட்பவியர் கல்லூரி மாணவியர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து அனைத்து சார்நிலை, மாவட்ட நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அனைத்து துறை அலுவலங்கள், அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து தன்னாட்சி அதிகார அமைப்புகள்,நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையினை ஏற்றுக்கொண்டனர்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட நீதிபதி கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், சார்பு நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உதயசூரியா, மாவட்ட நீதிபதி (ஓய்வு) ஜாண் ஆர்.டி.சந்தோஷம், துறை அலுவலர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.