திருச்சி, ஜூலை 24 –
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் நீலகண்டன் மாநகராட்சி ஆணையருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மாநகராட்சி பகுதிகளில் 55 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கணக்கெடுப்பாளராகவும், மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே 29.06.2026 அன்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக திருச்சி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டதில் இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளோம்.
மேலும், தமிழ்நாடு அரசின் செயலாளரும் 17.07.2026 அன்று வெளியிடுள்ள கடிதத்தில் இது தொடர்பாக தெரிவித்துள்ளார்கள். எனவே, 55 வயதிற்கு மேற்பட்ட கணக்கெடுப்பாளர்களையும், மேற்பார்வையாளர்களையும் பணியாளர் நலன் கருதி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் 01.08.2026 அன்று முதல் களப்பணி செய்யும் ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி ஆணை வழங்கிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். நமது அண்டை மாநிலமான கேரள மாநிலம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.



