ஈரோடு பிப் 19
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறவில்லை.
இதன் பிறகு கடந்த திங்கட்கிழமை நடந்த இந்த கூட்டத்தில் குறைந்த அளவிலேயே பொது மக்கள் மனுக்களை கொடுத்தனர். இதற்கு காரணம் கடந்த திங்கட்கிழமை குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடப்பது குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரியாததால் அதிகமான மனுக்கள் வரவில்லை.
இந்த நிலையில் இந்த வாரம் நடந்த மனுநீதி நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, நத்தம் பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், சாலை, குடிநீர் மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 410 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டுறவுத்துறையின் சார்பில் இப்கோ டோக்கியோ காப்பீட்டு நிறுவனம் மூலம் பயிர்கடன் பெறும் உறுப்பினர்களுக்கு தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சென்னியங்கிரிவலசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் காப்பீட்டு தொகை செலுத்தியிருந்த உறுப்பினர் சாலை விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மனைவிக்கு ரூ.3 இலட்சம் தனிநபர் விபத்து காப்பீட்டுத் தொகையினை வழங்கினார். மேலும், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் நியாயவிலைக்கடைப் பணியாளர்களான 2 விற்பனையாளர்கள் மற்றும் ஒரு எடையாளர் ஆகியோருக்கு மாவட்ட அளவிலான சிறந்த நியாயவிலைக்கடைப் பணியாளர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ரூ.10,000 மதிப்பீட்டில் பரிசுத்தொகையினை வழங்கி கௌரவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.