நாகர்கோவில் அக் 3
நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் துறையினரால் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் பதிவெண் பொருத்தப்படாத 12 இருசக்கர வாகனங்கள் மற்றும் குடிபோதையில் ஓட்டி வரப்பட்ட ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் குமரி மாவட்டத்தில் பொறுப்பேற்ற நாள் முதல் குமரி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக கொண்டுவர பல்வேறு விதமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது உடனடி நடவடிக்கை எடுத்தும் வருகிறார் . மேலும் சாலை போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார். அவரின் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையிலான சார்பு ஆய்வாளர்கள் சுமித் ஆல்ட்ரின், பாலசெல்வன் மற்றும் காவலர்கள் நாகர்கோவில் மாநகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு சாலை போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக நேற்றைய தினம் நாகர்கோவில் மாநகர் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் தீவிர வாகன சோதனைகள் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, பதிவு எண் தகடு பொருத்தப்படாமல் ஓட்டி வரப்பட்ட 12 வாகனங்களை பிடித்து அபராதம் விதித்து பறிமுதல் செய்யப்பட்டது மட்டுமல்லாமல் அந்த வாகனங்களின் பதிவெண் சரி செய்யப்பட்ட பின்னர் வாகனங்கள் விடுவிக்கப்பட்டது
மேலும் நடைபெற்ற வாகன தணிக்கையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அபாயகரமாக (rash) வாகனம் ஓட்டுதல், மூன்று நபர்கள் பயணம் செய்தல், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல் உட்பட மொத்தம் 362 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
மேலும் வாகன தணிக்கையின் போது மது போதையில் ஓட்டி வரப்பட்ட ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.