ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட கடம்பாகுளத்தில் இருந்து டிராக்டர்களில் அனுமதி சீட்டு இன்றி மண் அள்ளி ஆழ்வார்திருநகரி மற்றும் சிவராம் மங்கலம் பகுதியிலுள்ள செங்கல் சூளைகளுக்கு கொண்டு சென்ற 27 டிராக்டர்களை டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து ஆழ்வார்திருநகரி மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையங்களில் ஒப்படைத்தனர். புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி ராமகிருஷ்ணனின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட கடம்பா குளத்தில் இருந்து விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் அல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், கடம்பாக்குளத்தில் இருந்து நீர்வளத் துறையினரின் உரிய அனுமதி சீட்டு இன்றி டிராக்டர்களில் வண்டல் மண் அள்ளி ஆழ்வார்திருநகரி பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்து வந்தனர். ஞாயிற்றுக்கிழமை குளங்களிலிருந்து மண் அள்ளப்படுவதில்லை என்பதால் செங்கல் சூளைகளுக்கு எதிரே நெல்லை திருச்செந்தூர் சாலை ஓரத்தில் நீண்ட வரிசையில் சனிக்கிழமை இரவில் 30க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் விபத்தை ஏற்படுத்தும் விதமாக நிறுத்தப்பட்டிருந்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஸ்ரீவைகுண்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் ஆழ்வார்திருநகரி பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் ஆய்வு செய்தனர். அப்போது கடம்பா குளத்தில் இருந்து 27 டிராக்டர்களில் மண் அள்ளி செங்கல் சூளைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் 27 டிராக்டர்களின் பறிமுதல் செய்து ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் ஒன்பது டிராக்டர்களையும் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் 18 டிராக்டர்களையும் ஒப்படைத்தனர். விவசாயத்திற்கு மண் அள்ள கடம்பா குளத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் உரிய அனுமதி சீட்டு இன்றி ஒரே நேரத்தில் 27 டிராக்டர்கள் செங்கல் சூளைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக பதவியேற்ற இரண்டு நாட்களில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக டிஎஸ்பி ராமகிருஷ்ணனின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்