தேனி, ஏப். 22 –
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வாக்காளர்களிடையே 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் விரிவான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் பணிபுரியும் களப்பணியாளர்கள் இந்த பேரணியில் உற்சாகமாக கலந்து கொண்டு வாக்களிப்பின் அவசியம், ஒவ்வொரு வாக்கின் மதிப்பு, ஜனநாயகத்தில் பொதுமக்களின் பங்கு ஆகியவற்றை மக்களுக்கு விளக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பினர். மேலும், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தேர்தலில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.
இந்த பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ப. ராஜகுமார் தொடங்கி வைத்து, “நூறு சதவீத வாக்குப்பதிவு என்பது ஒரு இலக்கு மட்டுமல்ல, ஜனநாயகத்தின் வலிமையை வெளிப்படுத்தும் முக்கியமான செயலாகும். அனைவரும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு அலுவலர் ஏ. எடிசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் முத்துக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு பேரணியை சிறப்பித்தனர்.



