தூத்துக்குடி, ஜூன் 26 –
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் சரக்கு கையாளுவதில் புதிய சாதனை படைத்து உள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சரக்குகள் இறக்குமதி செய்யப்படுகிறது. அதே போன்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் அதிக அளவில் நடந்து வருகின்றன. இந்த துறைமுகம் கடந்த மே மாதம் வரை 20 லட்சத்து 26 ஆயிரத்து 544 டன் நிலக்கரியை கையாண்டு உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கையாளப்பட்ட நிலக்கரியை விட 45.30 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு 13 லட்சத்து 94 ஆயிரத்து 763 டன் நிலக்கரி கையாளப்பட்டு இருந்தது.
இதே போன்று கடந்த மே மாதம் வரை 3 லட்சத்து 62 ஆயிரத்து 248 டன் சுண்ணாம்பு கல்லை துறைமுகம் கையாண்டு சாதனை படைத்து உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கையாளப்பட்டதை விட 84.55 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு 1 லட்சத்து 96 ஆயிரத்து 286 டன் கையாளப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையான அதிகரிப்பு சிமெண்ட் மற்றும் உரம் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருளான சுண்ணாம்புக்கல்லின் தடையற்ற வினியோகத்தை உறுதி செய்வதில் துறைமுகத்தின் பங்கை எடுத்துக்காட்டுகிறது என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.