சங்கரன்கோவில், செப். 3 –
சங்கரன்கோவில் நகராட்சி 30-வது வார்டு தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் காதர்ஒலி மகன் லியாகத் அலி (30). இவர் ஆடுகள் வளர்த்து விற்பனை செய்து வருகின்றார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி வெறி நாய்கள் கடித்ததால் 25 ஆடுகள் பரிதாபமாக உயிர் இழந்தது. எஞ்சிய 12 ஆடுகளுக்கு சங்கரன்கோவில் கால்நடை மருத்துவமனை மருத்துவர் ஜானகி தாயார் தலைமையில் உதவி மருத்துவர்கள் பெரும்பத்தூர் மகிழன், பெருங்கோட்டூர் ராஜா ஆகியோர் தடுப்பூசிகள் போட்டு முதல் உதவி சிகிச்சை மேற்கொண்டனர்.
தொடர்ந்து ஆடு வளர்த்தவர்கள் காயமடைந்த 12 ஆடுகளை நெல்லை கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த வெறி நாய்கள் கடித்த சம்பவத்தில் 25 ஆடுகள் பலியானதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபருக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ சார்பில் ரூபாய் 50,000 மற்றும் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் கௌசல்யா சார்பில் ரூபாய் 25,000 சேர்த்து மொத்தம் 75,000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ, சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன், நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அப்பாஸ், மாவட்ட இளைஞரணி அன்சாரி, நகர மாணவரணி வெங்கடேஷ், சிறுபான்மையினர் அணி அப்துல்காதர், வர்த்தக அணி ரகுமான், ஜெயக்குமார் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



