நாகர்கோவில், ஜூன் 20 –
நாகர்கோவில் இளங்கடை பட்டாரியார் நெடுந்தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ண பெருமாள். இவரது மனைவி பத்மா (50). இவர்களது மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகள் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். மகளைப் பார்ப்பதற்காக பத்மா பெங்களூர் சென்றார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய மர்ம நபர்கள் அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் நகையைத் திருடிச் சென்றனர். நேற்று காலை பத்மா வீட்டிற்கு அவரது உறவினர் ஒருவர் வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திருட்டு நடந்து இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் பத்மாவிற்கும் கோட்டார் போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஒன்றரை பவுன் நகை திருட்டுப் போனது தெரியவந்தது. மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்த நாய் சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது. கைரேகை நிபுணர்கள் அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகையைப் பதிவு செய்தனர். போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்த போது பீரோவில் அடுக்கி வைத்திருந்த துணிகளுக்கு இடையே மறைத்து வைத்திருந்த 27 ஆயிரம் ரொக்கப் பணம் இருந்தது. வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் கண்ணில் இந்த பணம் சிக்காததால் பணம் தப்பியது. இந்தத் திருட்டு குறித்து கோட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


